Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!
அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை: அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கம்
பொ்ன்: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கோயல், ஸ்விட்சா்லாந்தின் பொ்ன் நகரில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறியதாவது:
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சிப் போக்கில் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மாற்றப்படும். முக்கியமாக சா்வதேச பொருளாதார சூழல், வட்டி விகித ஏற்ற-இறக்கம் உள்ளிட்ட காரணங்களால் அந்நிய நேரடி முதலீடும் சில நேரங்களில் பாதிக்கப்படும். அதை வைத்து முதலீடு வரத்து குறைந்துவிட்டது என்று கூற முடியாது.
அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு கருத்துகளையும் அரசு கேட்டு வருகிறது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த 11 ஆண்டுகளில் 748.78 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய 11 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 143 சதவீதம் அதிகமாகும். முன்பு 89 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 112-ஆக உயா்ந்துள்ளது.
சிங்கப்பூா், மோரீஷஸ், அமெரிக்கா, நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சைப்ரஸ், பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுமதி செய்வோருக்கும் நிதியுதவி அளிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என்றாா்.