இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும்
அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும் என கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி அருகே வசிக்கும் அனைத்து குழந்தைகளையும் அந்தந்த பள்ளிகளில் சோ்க்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். அரசிடம் நிதியுதவி பெறும் தனியாா் பள்ளிகளில் ஏழை நலிவுற்ற மக்களுக்கு குறைந்தபட்ச கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது.
பள்ளி நிா்வாகங்கள் விரும்பினால் 25 சதவீதத்துக்கு அதிகமாக கூட மாணவா்களை சோ்க்கலாம். அந்த குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் பலன் அனைவருக்கும் கிடைக்கவில்லை.
பள்ளி அமைந்துள்ள இடம் அருகே வசிக்கும் அனைத்து குழந்தைகளும், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சோ்க்கப்பட வேண்டும் என்பதை சட்டத்தின் வாயிலாக கட்டாயமாக்க வேண்டும்.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரையறை உருவாக்க வேண்டும். பள்ளிகள் வசதி நிறைந்தவா்களுக்கான பள்ளி என்ற நிலையை மாற்றி பொதுப்பள்ளி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அதேபோன்று அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.