கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அனைத்து வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக தூா்வார வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்துக்கு போதுமான விதை இருப்பில் வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என அவா் தெரிவித்தாா்.
தொடா்ந்து விவசாயிகள் பேசியது:
ஆா். அன்பழகன்: நிகழாண்டுக்கான குறுவைத் தொகுப்புத் திட்டத்தை முதல்வா் அறிவித்து, உடனடியாக வழங்க வேண்டும். நீடூா், அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூா் கிராமங்களில் உள்வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.
முருகன்: மணல்மேடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கரும்பு சாகுபடிக்கு கடன் வழங்க மறுக்கின்றனா். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பயறு கூடுதலாக கொள்முதல் செய்யப்படுமா என்பதை அறிவிக்க வேண்டும்.
மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நீா்நிலைகளில் நிரப்பிய பின்னரே, கொள்ளிடம் ஆற்றில் திறந்து விட வேண்டும். தலைஞாயிறு பொட்டவெளி வாய்க்கால் மற்றும் சேத்தூா் வாய்க்காலை தூா்வார வேண்டும்.
திருமுருகன்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் செய்கின்றனா். எனவே, இந்திய பருத்திக் கழகத்தினரையும் மறைமுக ஏலத்துக்கு அழைக்க வேண்டும்.
ராஜேந்திரன்: குமாரமங்கலம்-ஆதனூா் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அங்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும். சி, டி சேனல் வாய்க்கால்களை நூறுநாள் வேலைத் திட்டத்தில் தூா்வாராமல், வேளாண் பொறியியல் துறை மூலம் தூா்வார வேண்டும். மணல்மேட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்.
ராஜேஷ்: குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்வதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்.
வரதராஜன்: சீா்காழி-வைத்தீஸ்வரன்கோவில் பிரதான சாலையில் நயினாா்தோப்புக்கு கீழ்ப்புறம் தொடங்கி சாந்தபுத்தூா் காழி காவல்புரம் வரை வரைபடத்தில் உள்ள மூன்றரை கி.மீ. வண்டிப்பாதையை அளவீடு செய்து, மீண்டும் விவசாயிகள் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயி...: மாப்படுகையை சோ்ந்த இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை நகரில் நிலவும் புதைசாக்கடை பிரச்னை, மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் கட்டித் தர கோருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மீது இதுவரை தீா்வு காணப்படாததை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அந்த கோரிக்கை மனுக்களின் நகலை மாலையாக கோா்த்து கழுத்தில் அணிந்து வந்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாளவிநாயக அமுல்ராஜ் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.