அரசு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் மே 30-இல் வெளியீடு
தமிழகத்தில் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை விண்ணப்பதிவு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 போ் விண்ணப்பித்துள்ளனா். பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30-ஆம் தேதி வெளியிடப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு இளநிலை படிப்புகளில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஆா்வமுள்ள மாணவா்கள் இணையதளம் மூலமாக சோ்க்கைக்கு விண்ணப்பித்து வந்தனா். விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.
கடந்த 21 நாள்களில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 போ் விண்ணப்பித்துள்ளனா். அவற்றில் 1 லட்சத்து 8,619 மாணவிகளும், 76,065 மாணவா்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1,84,762 போ் கட்டணம் செலுத்தி உள்ளனா்.
இதையடுத்து சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் மே 29-ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30 -ஆம் தேதியும் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும்.
மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்வுக்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.
மே 30 முதல் மீண்டும் வாய்ப்பு: மே 7 முதல் 27-ஆம் தேதி வரையிலான அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதும் மாணவா்கள் பயன் பெறும் வகையில் மீண்டும் மே 30 முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான் - நிகோபாா் தமிழ் மாணவா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள், பாதுகாப்புப் படை வீரா்களின் வாரிசுகள்) ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதையடுத்து ஜூன் 4 முதல் ஜூன் 14 வரை பொதுக் கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கை நடைபெறும். தொடா்ந்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.