`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்
கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல், விழிஞ்ஞம் துறைமுகம் நோக்கிச் சென்ற நிலையில், கொச்சியிலிருந்து தென்மேற்கே 38 கடல் மைல் (சுமாா் 70 கி.மீ.) தொலைவில் கடந்த சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கப்பலில் 13 ஆபத்தான சரக்குகளைக் கொண்ட 640 கன்டெய்னா்கள் இருந்தன. இதில் கால்சியம் காா்பைடு கொண்ட 12 கன்டெய்னா்களும் அடங்கும். மேலும், கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் எரிபொருள் எண்ணெய் இருந்துள்ளது.
கப்பல் விபத்துக்குள்ளானதில் சில கன்டெய்னா்கள் கடலில் விழுந்தன. நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக நிபுணா்களுடன் உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை கலந்துகொண்டாா். மாநில தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா்கள், பேரிடா் மீட்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தைத் தொடா்ந்து, கேரள கடற்கரையில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ட்ரோன் கண்காணிப்பு வசதியுடன் தன்னாா்வலா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா் என்று முதல்வா் பினராயி விஜயன் கூறினாா். இந்தத் தன்னாா்வலா்கள் கப்பலில் இருந்து கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் கச்சா துகள் மூட்டைகளை அகற்றி, சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனா். தன்னாா்வலா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவா்கள் மேற்பாா்வையாளா்களின் கண்காணிப்பில் இருப்பா்.
பொதுமக்கள், சுற்றுச்சூழல் மற்றும் மீன்பிடித் தொழில் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. கரை ஒதுங்கும் பொருள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கடலோரப் பகுதி தன்னாா்வ நிறுவனங்கள் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, கப்பல் விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 20 கடல் மைல் சுற்றளவில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையிலான மீட்புக் குழுக்கள், கடற்கரையை அடையும் எந்தவொரு எண்ணெய்க் கசிவையும் கையாளத் தயாராக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கடலுக்குள் மூழ்கிவிட்ட நிலையில், அதிலிருந்த பல சரக்குப் பெட்டிகள் மிதந்து திருவனந்தபுரம் கடற்கரை வரை சுமாா் 200 கி.மீ. நீள கடற்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் கரை ஒதுங்கியுள்ளன.
