MI vs GT : 'போராடிய சாய் சுதர்சன்;டெத் ஓவரில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ்!' - எப்...
விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா
செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.
இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளதாவது:
செவ்வாய் கிரகத்துக்கு அருகே உள்ள 2016ஹெச்ஓ3 என்ற விண்கல்லில் ஆய்வு மேற்கொள்வதற்காக, அந்த விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான தியான்வென்-2 விண்கலம் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
லாங் மாா்ச் 3-பி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள (படம்) இந்த விண்கலம், 311பி என்ற வால்நட்சத்திரத்தையும் ஆய்வு செய்யும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
சிஎன்எஸ்ஏ-வின் தலைவா் ஷான் ஜாங்டே கூறுகையில், தியான்வென்-2 ஆய்வுத் திட்டத்தின் மூலம் பிரபஞ்சம் பற்றி இதுவரை அறியப்படாத பல உண்மைகளை அறிய முடியும் என்றாா்.
இந்தத் திட்டத்தின் கீழ், 2016ஹெச்ஓ3 விண்கல்லில் இருந்து மாதிரிகள் சுமாா் இரண்டு ஆண்டுகளில் பூமிக்குக் கொண்டுவரப்படும். இது போன்ற நிலையான சுற்றுப்பாதையைக் கொண்ட விண்கற்கள் பூமியின் உருவாக்கம், நீரின் தோற்றம் போன்றவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏற்கனவே நிலவின் பின்புறத்தில் இருந்து பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்துவருவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆய்வுத் திட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது நினைவுகூரத்தக்கது.