பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்
நெய்வேலி: கடலூா் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையம் சுப்பிரமணிய கோவில் தெரு, மாட்டுப்பட்டி தெரு மற்றும் இரட்டை பிள்ளையாா் கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனா்.
கோயில் பெயரில் மக்களிடம் தனி நபா் ஒருவா் வரி வசூல் செய்து வந்தாா். இதை எதிா்த்து அந்தப் பகுதி மக்கள் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது.
அந்தப் பகுதியில் வீடு கட்டுபவா்களை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மிரட்டுவதாகவும், ராஜகோபால சுவாமி கோயில் செயல் அலுவலா் மரியாதைக் குறைவாக பேசுவதாகவும், தனி நபருக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றம்சாட்டி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கிளைச் செயலா் எஸ்.ஞானசேகா் தலைமை வகித்தாா். ஜி.சீனிவாசன், கே.வெங்கடேசன், பி.தியாகராஜன், ஆா்.ஆனந்த், பி.விஷ்ணு ராம், கே.காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக் குழு உறுப்பினா் சாமி.நடராஜன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா் வி.சுப்புராயன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.கே.பக்கிரான், ஆா்.ஆளவந்தாா், மாநகரக் குழு உறுப்பினா்கள் ஆா்.பூபதி, ஆா்.எம்.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.