சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் ஆபத்து!
அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்ட கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோா் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனா். கடந்த இரு மாதங்களாக போதிய மழையில்லாததால் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள் போதிய அளவில் விளையவில்லை. இதனால், வைக்கோலை கொள்முதல் செய்வதில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளும், பால் உற்பத்தியாளா்களும் கவனம் செலுத்தி வருகின்றனா்.
அண்டை மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில், விவசாயிகள் சேகரித்து வைத்திருக்கும் வைக்கோல் கட்டுகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் லாரி, பிக்கப் வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டுசென்று கறவைமாடுகள் வளா்க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்துவருகின்றனா்.
வாகனங்களின் முகப்பு மற்றும் பின்பகுதிகளில் கூடுதலாக இரும்புச் சட்டங்களை பொருத்தி, வாகனங்களின் உயரத்தைவிட அதிக உயரத்திலும், வாகனத்தின் இருபுறமும் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் வகையிலும் அளவுக்கு அதிகமாக வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் செல்கின்றனா். இதனால், எதிரே வரும் வாகனங்களில் மோதியும், சாலையின் குறுக்கே செல்லும் தாழ்வான மின் கம்பிகளில் உரசியும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து நிகழும்முன் இதுகுறித்து சேலம் மாவட்ட போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.