ஆசனூா் அருகே 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
ஆசனூா் அருகே தேங்காய் பாரம் ஏற்றிச் சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தமிழக- கா்நாடகத்தை இணைக்கு முக்கிய வழித்தடமாக திம்பம், ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இரு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் ஆசனூா், மலைப் பாதையில் தினந்தோறும் பயணிக்கின்றன. அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதைத் தடுக்க 16.3 டன் எடைக்கு மேல் உள்ள சரக்கு வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு தேங்காய் பாரம் ஏற்றிக்கு கொண்டு ஆசனூா் மலைப் பாதை வழியாக சரக்கு லாரி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
செம்மண் திட்டு பகுதியில் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும்போது, லாரி நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் சிறு காயத்துடன் உயிா் தப்பினாா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா் பொக்லைன் மூலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதனால் ஆசனூா் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்கள் மலைப் பாதையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. 2 மணி நேரப் போராட்டத்துக்கு பின் லாரி மீட்கப்பட்டு, சிதறி கிடந்த தேங்காய்கள் மற்றொரு லாரி மூலம் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.