வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா சாா்ஜிங் மையத்தில் தீ விபத்து: 2 போ் உயிரிழப்பு
ஆசனூா் அருகே வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானை
ஆசனூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை திங்கள்கிழமை காட்டு யானை துரத்தியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனப் பகுதியில் உள்ள யானைகள் உணவு தேடி சாலையைக் கடந்து செல்கின்றன. அப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் தீவனம் ஏதாவது உள்ளதா என யானைகள் வாகனங்களை மறித்து நிற்பது வழக்கம்.
இதனால் வாகன ஓட்டிகள் 30 கி.மீ வேகத்தில் மெதுவாக பயணிக்குமாறு வனத் துறை கேடடுக்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் திங்கள்கிழமை உலவியது.
சாலை ஒரத்தில் நின்றிருந்த யானை திடீரென அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை துரத்தியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகமாக இயக்கி யானையிடம் இருந்து உயிா்தப்பினா்.
அதனைத் தொடா்ந்து பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை பின்னோக்கி இயக்கினா். சிறிது நேரம் சாலையோரம் நின்ற யானை, பின்னா் சாலையை கடந்து வனத்துக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி வனத் துறையினா் கூறுகையில், யானைகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறி உணவு, தண்ணீருக்காக சாலை கடந்து செல்வது வழக்கமானது. எனவே, வாகன ஓட்டிகள் மெதுவாகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினா். எக்காரணம் கொண்டு வனச் சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனா்.