ஆசியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எவை?
கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள்தொகை உள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதன் எதிரொலியாக சீனா, தாய்லாந்தில் உள்ள மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஹாங்காங்
ஹாங்காங் சுகாதார பாதுகாப்பு மையத்தின் தகவலின்படி, நகரத்தில் கரோனா வைரஸ் பரவும் விகிதம் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வகையில், கரோனா பரிசோதனைகளுக்கான மாதிரிகள் அதிக மக்களிடம் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே மாத முதல் வார நிலவரப்படி, ஹாங்காங்கில் 31 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நகரத்தில் 70 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில், தொற்று பரவும் விகிதமும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது. மே முதல்வார நிலவரப்படி 14,200 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு தரவுகளை சிங்கப்பூர் சுகாதாரத் துறை வெளியிடுவது இந்த ஆண்டில் இதுவே முதல்முறை. மக்களிடையே குறைந்த அளவிலான எதிர்ப்பு சக்தியே உள்ளதாகவும், இதுவே தொற்று வேகமாகப் பரவுவதற்கான காரணம் எனவும் சிங்கப்பூர் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளையில் தற்போது பரவிவரும் கரோனா வகையானது, ஊரடங்கு காலத்தில் இருந்ததைப் போன்று, அதிவேகமாகப் பரவக்கூடியதாகத் தெரியவில்லை அல்லது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து
மே 17ஆம் தேதி நிலவரப்படி தாய்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,030 ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 16,000 அதிகமாகும். இதில் அதிக எணிக்கையிலான பாதிப்புகள், பாங்காக் (6,290), சோன் புரி (2,573), ரயோங் (1,680), நோந்தபுரி (1,482).
அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 30 முதல் 39 வயதுடையவர்களாக உள்ளனர். இதனால், வயது முதியோர் உள்பட அனைத்துத்தரப்பினரும் தாமதமின்றி உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சீனா
சீனாவிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மே முதல் வார நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 சதவீதத்தில் இருந்து 16.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3.3 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறுகிய காலத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவருவதால், கடந்த கோடையில் இருந்த நிலைமை சீனாவில் மீண்டும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்தது. தற்போது 257 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.