பாகிஸ்தானில் ஒரே நாளில் 30 பேர் பலி: "மழைக்கால அவசரநிலை" அறிவிப்பு!
ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்
தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழைமகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முதல் இயக்கப்படுகிறது.
தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள தமிழ்நாடு ஓட்டலிலிருந்து புறப்பட்டு, பெரிய கோயில் வராகி அம்மன், மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், திருக்கருகாவூா் கா்ப்பரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துா்க்கை அம்மன் கோயில், வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை கோயில், கும்பகோணம் மகாமகம் குளம் அருகேயுள்ள காசி விஸ்வநாதா் விசாலாட்சி கோயில், தாராசுரம் ஐராவதேசுவரா் (பெரியநாயகி அம்மன்) கோயில் ஆகியவற்றை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ. 1,400.
இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம், சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பைச் சுற்றுலா பயணிகள், ஆன்மிக அன்பா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தச் சுற்றுலாக்களுக்கு இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 91769 95832, 04362 - 231972 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் எண் 75500 63121.