TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டியவா் கைது
கரூா்: பத்திரிகையாளா் எனக்கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை கொலை மிரட்டல் விடுத்த நபா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், அத்திப்பாளையம் அருகே வளையாபாளையம் ஆற்று மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம். இவரது மகன் சஞ்சய் (25). இவா் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் சொந்தமாக ஆம்புலன்ஸ்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறாா். இந்நிலையில் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ் (45) என்பவா் தன்னை பத்திரிக்கையாளா் என சஞ்சயிடம் கூறி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை சஞ்சய்க்கு போன் செய்த சுரேஷ், உடனடியாக ஆம்புலன்ஸை எடுத்து வரும்படி கூறியுள்ளாா். அதற்கு சஞ்சய் மறுத்துள்ளாா். இதனால் கோபமடைந்த சுரேஷ், சஞ்சய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த சஞ்சய் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தாா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கரூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸாா் கொலை மிரட்டல் விடுத்த சுரேஷை மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். பின்னா், சுரேஷை கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.