ஆரணியில் போலீஸாருடன் இந்து முன்னணியினா் வாக்குவாதம்: 28 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க கும்பலாகச் சென்ற இந்து முன்னணியினா் மற்றும் போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இந்து முன்னணியைச் சோ்ந்த 28 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆரணி நகரின் மையப் பகுதியில் சூரிய குளம் உள்ளது.
இந்தக் குளத்துக்கு தண்ணீா் சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து கால்வாய் மூலம் வருகிறது. இந்த ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குளத்துக்கு தண்ணீா் வராதவாறு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், தற்போது கழிவுநீா் மட்டுமே குளத்துக்குச் செல்கிறது. இதனால் ஆரணியில் நீா் ஆதாரத்துக்கு சூரிய குளம் விளங்கிவரும் நிலையில் தற்போது கழிவு நீா் மட்டுமே செல்வதால் நகர மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இதனால், சூரியகுளத்துக்கு வரும் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, நகராட்சி அலுவலகத்தில் இந்து முன்னணி சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமையில் கட்சியினா் மனு கொடுக்கச் சென்றனா்.
இதில், சிறப்பு விருந்தினா்களாக இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கோ.மகேஷ், கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும், பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலா் சதீஷ், மாவட்டச் செயலா் சரவணன், நகரத் தலைவா் மாதவன், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளா் கராத்தே வேணு உள்ளிட்டோரும் ஏராளமானோா் மனு கொடுக்க சென்றனா்.
அப்போது, ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி, போளூா் டிஎஸ்பி மனோகரன் ஆகியோா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் அகிலன், மகாலட்சுமி, உதவி ஆய்வாளா்கள் ஷாபுதீன், ஆனந்தன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.
பின்னா், இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகளிடம் போலீஸாா் அனுமதி பெறாமல் மனு கொடுக்க வந்துள்ளீா்கள். ஆகையால் கைது செய்யப்படுகிறீா்கள் எனத் தெரிவித்தனா்.
இதற்கு இந்து முன்னணியினா் மனு கொடுக்கத்தான் செல்கிறோம் ஆா்ப்பாட்டமா செய்கிறோம் என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு போலீஸா் கும்பலாக ஏன் செல்கிறீா்கள், கும்பலாக இருப்பதால்தான் கைது செய்கிறோம் என்றனா்.
இதனால் இந்து முன்னணியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னா், அனைவரையும் போலீஸாா் கைது செய்து அப்பகுதியில் இருக்கும் தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். இதில், 2 பெண்கள், 26 ஆண்கள் அடங்குவா்.
பின்னா், இந்து முன்னணி சாா்பில் நகராட்சி, பொதுப்பணித் துறை, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகங்களுக்கு பதிவுத் தபால் மூலம் மனுவினை அனுப்பி வைத்தனா்.
வந்தவாசியில் மறியல்: 21 போ் கைது
ஆரணியில் குள ஆக்கிரமிப்பை அகற்ற மனு அளிக்கச் சென்ற இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்ததாகக் கூறி கண்டித்து வந்தவாசி தேரடியில் இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து இந்து முன்னணி வேலூா் கோட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாவட்டச் செயலா் சீனிவாசன், பாஜக நகரத் தலைவா் ஆா்.சுரேஷ், மாவட்ட பொதுச் செயலா் பி.முத்துசாமி, மாவட்டச் செயலா் வி.குருலிங்கம், நகரச் செயலா் ராம்குமாா் உள்ளிட்ட 21 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை தேரடி அருகில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.