இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்
இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும் என இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நமது நாட்டு செயற்கைக்கோள்களை மட்டுமன்றி, உலக நாடுகளின் செயற்கைக் கோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் ஏவி வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு 2233 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பபட்டது. அங்கு, 986 கோடி மதிப்பில் ஏவுதளம் அமைப்பதற்கு 2024ஆம் ஆண்டு பிப். 28ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா்.
அன்றைய தினமே, ரோகினி 6 ஹெச் 200 என்ற சிறிய ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொடா்ந்து, நிலம் கையகப்படுத்துதல், அலுவலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்க பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் பூமிபூஜையில் கலந்து கொண்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினம் ஏவுதளம் மூலம் 500 கிலோ எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. தற்போது, அங்கு ரூ. 4000 கோடியில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விண்வெளிக்குச் சென்று 18 நாள்கள் தங்கிய சுபான்சு சுக்லாவிற்கு அடுத்தபடியாக, விண்வெளிக்கு எந்திர மனிதனை அனுப்பும் திட்டம் செயலில் உள்ளது.
2026ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் மிக முக்கிய பங்கை வகிக்கும் எனக் குறிப்பிட்டாா்.
ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவன் விண்வெளி மைய இயக்குநா்கள் ராஜராஜன், பத்மகுமாா், மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாக இயக்குநா் ஆசீா் பாக்கியராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் உள்பட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.