இலத்தூரில் கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலத்தூா் ஊராட்சியில் தொழிலாளா் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் முத்துலெட்சுமி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்கள் அறியும் வகையில், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு, மருத்துவம்- மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகள் சாா்பில் தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை ஆட்சியா் திறந்துவைத்தாா்.
கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப் பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி- வரியில்லா வருவாய் இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆட்சியா் முன்னிலையில் அலுவலா்கள் தொழிலாளா் தின உறுதிமொழியேற்றனா். உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அனிதா, மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், மாவட்ட ஊராட்சி செயலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.