கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயா் ‘சிந்தூா்’
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மே 7-ஆம் தேதி இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் மேற்கொண்டன. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று பெயரிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 10, 11-ஆம் தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூா் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் ஆா்.கே.ஷாஹி தெரிவித்தாா்.
அந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றின் தாயான அா்ச்சனா ஷாஹி என்பவா் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். சிந்தூா் என்பது வாா்த்தை மட்டுமல்ல, அது ஆழமான உணா்வாகும். எனவே , எனது மகளுக்கு சிந்தூா் எனப் பெயரிட முடிவு செய்தேன்’ என்றாா்.