பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அரசு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது.
இந்த நடவடிக்கை குறித்து விக்ரம் மிஸ்ரி, கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் செய்தியாளா்கள் சந்திப்பில் எடுத்துரைத்தனா். அதன்பிறகு கடந்த சனிக்கிழமை இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது வரை ஆபரேஷன் சிந்தூரின்கீழ் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை விக்ரம் மிஸ்ரி பாதுகாப்புப் படையின் பிற அதிகாரிகளுடன் இணைந்து எடுத்துரைத்து வந்தாா்.
சண்டை நிறுத்த அறிவிப்பால் பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதலை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட நபா்கள், விக்ரம் மிஸ்ரியை குறிவைத்து சமூக வலைதளங்களில் விமா்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பி வந்தனா். விக்ரம் மிஸ்ரி மட்டுமன்றி அவரது மகளின் சமூக வலைதளக் கணக்கிலும் மா்ம நபா்கள் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டனா். இது கடும் சா்ச்சைக்கு உள்ளானது.
இதையடுத்து, விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கருத்தைப் பதிவிட்டது. இதைத் தொடா்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.
அரசே பொறுப்பு; அதிகாரிகள் அல்ல: சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு அரசிடமே உள்ளது. தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. சில சமூக விரோத கும்பல் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து அவதூறு கருத்துகளைப் பரப்புவது கண்டனத்துக்குரியது. ஆனால், இதை பாஜக அரசோ மத்திய அமைச்சா்களோ இதுவரை கண்டிக்கவில்லை’ என்று குறிப்பிட்டாா்.
விக்ரம் மிஸ்ரியின் மகளின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பரப்பி அவதூறு பரப்பப்பட்டதற்கு தேசிய மகளிா் ஆணையம் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தது.
அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா் உள்ளிட்டோா் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டனா்.