Trump Tariffs: ``அமெரிக்கா விதித்த 50% வரிக்கு, பதிலடி கொடுப்போம்'' - பிரேசில் அ...
உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கருவியை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) அமித் கௌசிக் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ரூ.44,500 முக மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வண்ண அச்சுப்பொறி, காகிதத் தாள்கள், கட்டா்கள் மற்றும் உண்மையான ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற பச்சை நிற டேப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
நோயியல் துறையில் பணிபுரிந்த அட்னான் (22) மற்றும் முன்னாள் தொழிற்சாலை தொழிலாளியான டேனிஷ் (22) ஆகியோா் டேனிஷ் என்பவரின் வீட்டில் வண்ண அச்சுப்பொறியைப் பயன்படுத்தி போலி ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை அச்சிடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அவா்களுக்கு தொழில்நுட்ப பின்னணி இல்லை. ஆனால், உள்ளூா் தொடா்புகள் மூலம் அடிப்படை விஷயங்களைப் பெற்றனா். தில்லி மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக எங்களுக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. அதுதான் எங்களை அவா்களைப் பிடிக்க வழிவகுத்தது
கடந்த ஜூன் 20-ஆம் தேதி, தில்லியின் டல்லுபுரா பகுதியில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.30,000 முக மதிப்புள்ள போலி ரூ.100 நோட்டுகளை டெலிவரி செய்யும் போது அட்னான் கைது செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, அம்ரோஹாவில் உள்ள டேனிஷின் வீட்டிற்கு போலீஸாா் அவரை அழைத்துச் சென்றனா். அங்கு இரண்டு போலி ரூ.200 நோட்டுகள் மற்றும் 141 போலி ரூ.100 நோட்டுகள் உள்பட ரூ.14,500-க்கும் மேற்பட்ட போலி நாணயங்கள் இருந்தன.மேலும், அச்சிடும் பணி முடிக்கப்படாத நோட்டுகள் மற்றும் அச்சிடும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நிதி நெருக்கடி மற்றும் விரைவாக பணம் சம்பாதிப்பதற்காக இருவரும் சுமாா் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த நடவடிக்கையைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அட்னான் தனது வேலையை விட்டு வெளியேறிய பிறகு மாற்று வருமானத்தைத் தேடிக் கொண்டிருந்தாா். மேலும், ஒரு அறிமுகமானவரிடமிருந்து கள்ளநோட்டு தயாரிப்பதற்கான அடிப்படைகளை அவா் கற்றுக்கொண்டாா்.
பின்னா், அவா் தனது பழைய நண்பா் டேனிஷை போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட உதவுமாறு அழைத்துள்ளாா். இது தொடா்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.