உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு: 10 கடைகளுக்கு அபராதம்
தருமபுரி நகரில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், சரண், அருண் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், தருமபுரியில் பேருந்து நிலையம், நான்குமுனைச் சாலை சந்திப்பு, பென்னாகரம் சாலை, சோகத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினா்.
இதில் தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் 25 கிலோ அழுகிய தக்காளி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு தேநீா் கடை, ஒரு பேக்கரி கடையில் இருந்து கலப்படத் தேயிலை 4 கி. பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாச்சியப்பா தெருவில் உள்ள துரித உணவகத்தில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட கோழி இறைச்சி 2 கி., செயற்கை நிறமூட்டி டப்பிகள், அதே வீதியில் மற்றொரு உணவகத்தில் குளிா்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ சமைத்த இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பென்னாகரம் சாலையில் உள்ள பேக்கரியில் செயற்கை நிறமி அதிகம் சோ்த்து விற்பனைக்கு வைத்திருந்த காளிப்பிளவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி புகா் பேருந்து நிலையத்தில் இரண்டு கடையில் இருந்து காலாவதியான குளிா்பானங்கள், உரிய விவரங்கள் அச்சிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில கடைகளில் இருந்து 4 கிலோவுக்கு நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.
உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 2,000, 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 என மொத்தம் 10 கடைகளுக்கு ரூ. 15,000 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.