உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!
உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறினாா்.
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் உதகை- கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவளை மலைப் பகுதியில் பாறை விழுந்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், உதகை-கூடலூா் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், மற்ற வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வரலாம். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்கு கட்டுபாடுகள் இல்லை.
அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்: கனமழையையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முழுவதுமாக மூடப்படும்.
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் கொடநாடு காட்சி முனைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து வனத் துறையினா் முடிவெடுப்பா்.
மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன என்றாா்.