உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு, உத்தமபாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில் வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை உத்தமபாளையத்தில் நரசிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக கருப்பணசுவாமி கோயில் வரையில் வேல் யாத்திரை நடத்த முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா், அவா்கள் யாத்திரையைக் கைவிட்டு, நரசிங்கப்பெருமாள் கோயிலில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற பூஜை செய்தனா்.
இந்த பூஜையில், அந்த அமைப்பின் கோட்டப்பொறுப்பாளா் கண்ணாயிரம், வேல்சிவக்குமாா், சுவாமி, ராமகிருஷ்ணன், ஜோதிமணி, பஜ்ரந்தள் மாவட்ட பொறுப்பாளா்கள் காா்த்திக், சுரேந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.