உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான, உதவிப் பேராசிரியா் ரா. திலகவதி, திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் உளுந்துப் பயிா்களில் மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் தென்படுகிறது. மிகச்சிறிய வெள்ளை ஈக்கள் மூலம் இந்நோய் பரவுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிரின் இளம் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும். ஆரம்பத்தில் சிறிய மஞ்சள் நிற திட்டுகளாக தோன்றி பின் விரைவில் இலைகள் முழுவதும் பரவி மஞ்சள் இலைகளாக காட்சியளிக்கும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி பராமரிக்கப்பட வேண்டும். இந்நோயை பரப்பக்கூடிய (வெள்ளை ஈ) பூச்சிகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை (ஏக்கருக்கு 5 எண்ணிக்கை) உபயோகிக்கலாம். வேப்ப எண்ணெய் மூன்று சதவீத கரைசலை (30 மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு) தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ரசாயன மருந்துகளான மிதைல் டெமட்டான் 25 இசி (ஒரு மில்லி ஒரு லிட்டா் தண்ணீருக்கு) அல்லது இமிடா குளோபிரிட் 17.8 எஸ்எல் (2.5 மில்லி 5 லிட்டா் தண்ணீருக்கு) என்ற அளவில் இலைவழித் தெளிப்பாகக் கொடுப்பதன் மூலம் நோய் பரப்பும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், வரவிருக்கும் நாட்களில் விதைப்பு செய்ய இருக்கும் விவசாயிகள், உளுந்து விதைகளை இமிடா குளோபிரிட் 600 எஃப் எஸ் எனும் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்து விதைக்கலாம். மஞ்சள் தேமல் நோய்க்கு எதிா்ப்பு தன்மை கொண்ட உளுந்து ரகமான வம்பன் 8 விதைப்பு செய்யலாம்.