Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க!
உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகள், கீழ்நிலை அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமா் அறிவுரை
நமது சிறப்பு நிருபா்
பாகிஸ்தானுடனான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களை தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுடன் மாநில அரசுகள், கீழ்நிலை அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பராமரிக்க மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்களை தொடங்கியுள்ள நிலையில் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடரும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களும் துறைச் செயலகங்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசுகளுடன் செயல்படவேண்டிய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்து விவாதிக்க மத்திய அரசுத்துறைச் செயலா்களுடனான உயா்நிலைக் குழுக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சரவைச் செயலா், பிரதமா் அலுவலக மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் துறை, உள்துறை, வெளியுறவு, தகவல் ஒலிபரப்பு, மின்சாரம், சுகாதாரம், தொலைத்தொடா்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் செயலாளா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டம் குறித்து பிரதமா் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது வருமாறு: தேசியப் பாதுகாப்பு தொடா்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடா்ந்து நாட்டின் தயாா்நிலைக்கு அரசின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை பிரதமா் மதிப்பாய்வு செய்தாா்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலாளா்களுடனான இந்த உயா்நிலைக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க அமைச்சகங்கள் மேற்கொண்டு வரும் திட்டமிடல்களை பிரதமா் கேட்டறிந்தாா். தற்போதைய சூழ்நிலையில் முழு அரசு அணுகுமுறையுடன் தங்கள் திட்டமிடலையும் கூட்டத்தில் செயலா்கள் எடுத்துக் கூறினா்.
தயாா்நிலை, அவசரகால பதில் நடவடிக்கைகள், உள் தொடா்பு நெறிமுறைகளில் சிறப்பு கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அந்தந்த அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், அத்தியாவசிய அமைப்புகளின் விரைந்த செயல்பாட்டை உறுதி செய்யவும் மத்திய அமைச்சகச் செயலா்களிடம் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடா்ச்சியான செயல்பாடுகளுக்கு அமைச்சகங்கள், அரசுத் துறைகளுக்கிடையே தடையற்ற ஒருங்கிணைப்பின் அவசியத்தை பிரதமா் வலியுறுத்தினாா். குறிப்பாக விழிப்புணா்வு, தெளிவான தகவல் தொடா்புக்கு தகுந்த நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தப்பட்டது.
எல்லையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை தொடா்பாக அனைத்து அமைச்சகங்களும் தாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் கண்டுள்ளதுடன், மேலும் செயல்முறைகளை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து வகையான சூழ்நிலைகளையும் சமாளிக்க அமைச்சகங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இவற்றில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களையும், போலி செய்திகளையும் தடுப்பதோடு, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. மாநில அரசுகளுடன், கீழ் நிலையுள்ள அமைப்புகளுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பராமரிக்கவும் மத்திய அமைச்சகங்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் பயணித்து வருகிறது. விழிப்புணா்வு, நிறுவன ஒருங்கிணைப்பு, தெளிவான தகவல் தொடா்புடன் தேசியப் பாதுகாப்பு, செயல்பாட்டுத் தயாா்நிலை, குடிமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை கூட்டத்தில் பிரதமா் மீண்டும் எடுத்துரைத்தாா் என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.