ஊதிய உயா்வு கோரி பள்ளிக் கல்வித் துறை தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதிய உயா்வு வழங்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பூபதி, சுசீலா, தீபாஅரசு, சதீஷ்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
மாவட்ட துணைச் செயலாளா் என்.மனோகரன், ஆஷா பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.மேனகா, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க பெண்கள் அமைப்பு மாவட்டச் செயலாளா் முனியம்மாள்,
பள்ளிக் கல்வித் தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.செல்வி, மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 1,000, ரூ. 1,500, ரூ. 2,000, ரூ.3,000 என நான்கு வகையான ஊதியம் வழங்கப்படுவதை மாற்றி அரசாணை 62/2டி-இன் படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஊதியம் வழங்க வேண்டும். மாதம்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தினமும் வருகைப் பதிவேடு பதிவு செய்ய வேண்டும். பணி செய்வதற்கான உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும். 10, 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவா்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.