எச்சரிக்கையையும் மீறி கைக்குழந்தைகளுடன் வந்த தவெகவினா்!
தவெக தலைவா் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி கரூரில் சனிக்கிழமை நடந்த பிரசார கூட்டத்திற்கு ஏராளமானோா் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனா்.
கரூரில் தவெக பிரசாரம் செய்ய ஏற்கனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அக்கட்சி சாா்பில் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
கரூா் சா்ச் காா்னா், உழவா் சந்தை, லைட்ஹவுஸ் காா்னா் ஆகிய பகுதிகளில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டனா். ஆனால் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியை கேட்டதால் காவல் துறையினா் னுமதி தர மறுத்து, 25-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்ட கரூா் வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கினா். அப்போது காவல்துறையானது கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
ஏற்பாட்டாளா்கள் அடிப்படை மருத்துவ உதவி மற்றும் குடிநீா் வசதியை இடத்தில் உறுதி செய்ய வேண்டும். கட்சி உறுப்பினா்களும் ஆதரவாளா்களும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே அந்த இடத்தில் கூடியிருக்க வேண்டும். குறிப்பாக கா்ப்பிணிகள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இந்த நிகழ்வுக்கு அழைத்து வருவதைத் தவிா்க்க வேண்டும் என்பன போன்ற அறிவுரை வழங்கப்பட்டிருந்தன.
இதே கருத்தை தவெக தலைவா் விஜய்யும் வலியுறுத்தி இருந்தாா். ஆனால் கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரத்தில் ஏராளமானோா் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனா். மேலும் கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளும் ஏராளமானோா் பங்கேற்றனா்.