எம்புரான் : `பாசிசத்தின் புதிய வெளிப்பாடு' - சங்பரிவாருக்கு எதிராக கொதித்த பினராயி விஜயன்
மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. லூசிஃபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக உள்ளதாக மலையாள திரை உலகில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்புரான் சினிமாவில் பா.ஜ.க, காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளை விமர்ச்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
குஜராத் கலவரம் காரணமாக சங்பரிவார் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததாக பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகவும், குடும்ப அரசியலை மையமாக வைத்து காங்கிரஸை கிண்டலடிப்பதாகவும், சி.பி.எம் கட்சி குறித்தும் கிண்டல் செய்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன்காரணமாக சிலர் எம்புரான் சினிமா டிக்கெட்டை ரத்து செய்து அதன் ஸ்கிரீன்ஷார்ட்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

`உண்மையை வளைத்து ஒரு கதை கட்டி...’
இதற்கிடையே பா.ஜ.க கேரள மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், எம்புரான் சினிமா பார்க்க உள்ளதாக ஏற்கனவே தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் தனது முகநூல் எம்புரான் சினிமாவுக்கு எதிராக பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், "லூசிஃபர் சினிமா பார்த்திருந்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. லூசிஃபர் சினிமாவின் தொடர்ச்சியாக எம்புரான் சினிமா வெளிவந்துள்ளதாக கூறியதும் அதை நான் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால் இப்போது சினிமாவின் தயாரிப்பாளர்கள் சினிமாவில் 17 திருத்தங்கள் செய்து மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்துவதாக எனக்கு தெரியவந்தது.

மோகன்லாலின் ரசிகர்களும், பார்வையாளர்களும் வருத்தப்படும் காட்சிகள் சினிமாவில் உள்ளதாக எனக்கு புரிந்தது. சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். அதை சரித்திரமாக பார்க்க முடியாது. உண்மையை வளைத்து ஒரு கதை கட்டி கொடுக்கமுயலும் எந்த சினிமாவும் தோல்வியடையும் என்பது உறுதி. அப்படியானால் லூசிஃபர் சினிமாவின் தொடர்ச்சியை நான் பார்க்க வேண்டுமா - இல்லை. இந்த வகையிலான சினிமா தயாரிப்பால் நான் ஏமாற்றம் அடைந்திருக்கிறேனா -ஆம்" என அவர் பதிவிட்டுள்ளார்.
`அப்படியானால் எம்புரான் காண்போம்’
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட குறிப்பில் கூறுகையில், "எம்புரான் சினிமா பார்க்கமாட்டோம், புறக்கணிப்போம், டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டும் என சங்பரிவார் கூறிவருகிறது. நேற்றுவரை எம்புரான் சினிமா பார்க்க வேண்டும் எனக்கூறிய பா.ஜ.க மாநில தலைவர், இன்று அந்த சினிமாவை பார்க்கமாட்டேன் என கூறுகிறார். சிலருக்கு மதிய வேளை ஆனாலும் பொழுது விடியாது. அப்படியானால் எம்புரான் சினிமாவை காண்போம்" என கூறியுள்ளார்.

சி.பி.எம் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது கருத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
`இந்த அச்ச சூழல் கவலை அளிக்கிறது’
பினராயி விஜயன், ``மலையாள சினிமாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் சென்றுள்ள எம்புரான் சினிமா பார்த்தேன். சினிமாவுக்கும் அது நடித்தவர்களுக்கும் பட குழுவினருக்கும் எதிராக சங்பரிவார் அமைப்புகள் பிரிவினை கருத்துக்களை கட்டவிழ்த்துவிடும் சமத்தில் அந்த சினிமாவை பார்த்தேன். நாடு எதிர்கொண்ட மிகவும் கொடூரமான இனப்படுகொலை குறித்து சினிமாவில் கூறப்படும் கருத்து சங்பரிவார் அமைப்பினரை கோபப்படுத்தி உள்ளது. தொண்டர்கள் மட்டும் அல்லாது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுகின்றனர். இந்த அழுத்தத்தால் படக்குழுவினர் சினிமாவை மறு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்கள் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சங்பரிவார் அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட இந்த அச்ச சூழல் கவலை அளிக்கிறது. வகுப்புவாதத்துக்கு எதிராக நிலைபாடு எடுத்ததற்காக, அதன் பயங்கரத்தை வெளிப்படுத்தியதற்காக ஒரு கலை படைப்பாளியை இல்லாமல் ஆக்கும் வகையில், கொடூரமாக தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல.
இது பாசிச மனப்பாண்மையின் புதிய வெளிப்பாடாகும். சினிமாவின் ஜனநாயக, மதசார்பற்ற கருத்துக்கள் வேரூன்றிய இந்த நாட்டில் அதற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.” எனக் பினராயி விஜயன் கூறியுள்ளார்.