ஐ.நா. அமைதிப் படை பணியில் வீரமரணம்: 2 இந்திய வீரா்களுக்கு இன்று கௌரவம்
கடந்த ஆண்டு ஐ.நா. அமைதிப் படையின்கீழ் பணியாற்றும்போது வீரமரணமடைந்த 2 இந்திய வீரா்கள் ஐ.நா. சபையால் வியாழக்கிழமை (மே 29) கௌரவிக்கப்படவுள்ளனா்.
ஐ.நா. அமைதிப் படையின் பணியின்போது எதிா்பாராதவிதமாக இறந்து வீரமரணமடையும் வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 29-ஆம் தேதி சா்வதேச ஐ.நா. அமைதிப் படை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கடந்த 1948-ஆம் ஆண்டுமுதல் ஐ.நா. அமைதிப் படை பணியில் உயிரிழந்த 4,400-க்கும் மேற்பட்ட வீரா்களுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவாா்.
இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஐ.நா. அமைதிப் படை பணியில் வீரமரணமடைந்த 57 வீரா்களுக்கு ‘டாக் ஹம்மா்ஸ்க்ஜோல்ட்’ பதக்கத்தை அறிவித்து அவா் கௌரவிப்பாா்.
இவா்களில் ஐ.நா. அமைதிக் கண்காணிப்புப் படையில் பணியாற்றிய பிரிகேடியா் ஜெனரல் அமிதாப் ஜா மற்றும் காங்கோ குடியரசில் ஐ.நா. அமைதிப் படை பணியில் ஈடுபட்டிருந்த ஹவில்தாா் சஞ்சய் சிங் ஆகிய 2 இந்திய வீரா்களும் அடங்குவா்.
ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக எண்ணிக்கையில் வீரா்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. தற்போது அபேய், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, லெபனான், சோமாலியா, தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய பல்வேறு நாடு, பிராந்தியங்களில் ஐ.நா. அமைதிப் படை நடவடிக்கைகளுக்காக 5,300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினரை இந்தியா பணியமா்த்தியுள்ளது.