ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!
ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?
சிஎஸ்கேவின் தொடர்ச்சியான தோல்விகள் ஒருபுறமிருக்க, எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்குவது நடப்பு ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது. அதன் பின், தோனியின் உடல் முன்பு போன்று இல்லை, அவர் பேட்டிங் செய்யும் இடத்தை ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரே முடிவு செய்வார் என பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் கடந்த போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியை தோனியின் பெற்றோர் நேரில் காண வந்திருந்தனர். இதனால், தில்லிக்கு எதிரான போட்டியுடன் தோனி ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்திகள் பரவின. ஆனால், ஓய்வு குறித்து தோனியே முடிவு செய்வார் என தெரிவித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஃபிளெமிங்.
ஓய்வு குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி
ஐபிஎல்-லிருந்து தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான முடிவை எடுக்க இன்னும் 10 மாதங்கள் இருப்பதாக எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: நான் இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் விளையாடுகிறேன். எனக்கு தற்போது 43 வயதாகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் முடிவில் எனக்கு 44 வயதாகி இருக்கும். அதனால், அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய எனக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுவதைக் காட்டிலும், எனது உடல்தான் நான் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 76 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.