ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது!
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்துள்ளது.
கா்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, கெம்பாக்கரை, மொசல்மடுவு, ராசிமணல், அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வரை நீா்வரத்து இருந்தது.
தற்போது, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றின் நீா்வரத்தானது குறையத் தொடங்கியது. இதனால், வியாழக்கிழமை காலை 14,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, மாலை 8,000 கனஅடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 6,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி, சினி அருவி, பெரியபாணி உள்ளிட்ட அருவிகளில் நீரின் அளவு குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.