வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
ஒசூரில் அரசு பொறியியல் கல்லூரி: பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை
ஒசூரில் தொழிலாளா் வைப்புநிதி அலுவலகம், அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கோரிக்கை விடுத்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகள் மற்றும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கையின் போது ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:
தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் ஒசூரில் தொழிலாளா் வைப்புநிதி அலுவலகம் (பி.எப்) அமைக்க வேண்டும். தளி சாலையில் ஹரிதா, ஆவ்டெக், கேட்டா்பில்லா், டிவிஎஸ், ஏத்தா் போன்ற பெரு நிறுவனங்கள் இயங்கி வருவதால் ஒசூா்- தளி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்துடன் உள்வட்டச் சாலையை இணைத்து வட்டச்சாலை அமைக்க வேண்டும். ஒசூரில் அதிக அளவில் தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். அந்திவாடி மினி விளையாட்டு அரங்கை தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.
மேலும், ஒசூரில் ரூ. 400 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஒசூா் அறிவுசாா் பெரு வழித்தடம், ரூ. 370 கோடியில் புறவழிச் சாலை, ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ. 51 கோடியில் ஒசூா் புறநகா்ப் பேருந்து நிலையம், ரூ. 583 கோடியில் புதை சாக்கடை திட்டம், பன்னாட்டு விமான நிலையம் என ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ. 1,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.