``கடன் பெற்றவர்களின் ஒப்புதல் இல்லாமல் EMI-ஐ அதிகரிக்க கூடாது'' - RBI உத்தரவு
இ.எம்.ஐ - இன்று பலர் வாயிலும், வாழ்க்கையிலும் புழங்கும் ஒன்று.
வங்கிகள் திடீரென்று இ.எம்.ஐயை ஏற்றுகிறது, அதன் கால அளவை நீட்டிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக்கோ ஷாக். இதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
அவை என்ன?
கடன் வழங்குபவர் கடன் காலத்தை உயர்த்துவதற்கு முன்பு கடன் பெற்றவர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
வட்டி விகிதத்தின் உயர்வு காரணமாக இ.எம்.ஐ அல்லது தவணைக் காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.
கடன் பெற்றவர்களின் ஒப்புதல் இல்லாமல் தானாக இ.எம்.ஐயை அதிகரிப்பது, (தவணைக் காலத்தை கூட்டுவது) போன்றவற்றை செய்யக் கூடாது.

முன்கூட்டியே கட்டணங்கள் செலுத்தும்போது, அதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.
கடன் அறிக்கையில் வட்டி மற்றும் மற்ற விதிமுறைகளின் விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமாக, கடன் வழங்குவதற்கு முன், கடன் வாங்குபவரின் முழுமையான கடன் விவரங்களுடன் கூடிய முக்கிய உண்மை அறிக்கை (KFS) வழங்க வேண்டும்.
இந்த வழிமுறைகள் எதற்காக?
இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிமுறைகள் மூலம் வெளிப்படை தன்மையை அதிகரிக்க வழி செய்கிறது மற்றும் தானாக இ.எம்.ஐ தொகையை ஏற்றுவது, தவணைக் காலத்தை அதிகரிப்பது போன்றவற்றை தடுக்கிறது.