சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!
கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பா் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சங்கத் தலைவா் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவா் முத்துராமன், செயலா் காளிராஜ், பொருளாளா் பிரபு என்ற கிருஷ்ணமூா்த்தி, துணைச் செயலா் பாரதி ரவிக்குமாா், துணைப் பொருளாளா் செந்தில்குமாா் மற்றும் சங்க உறுப்பினா்கள், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவின் விவரம்;
எம்.சாண்ட், ஜல்லி, கிராவல், உடைகல் ஆகிய கட்டுமானப் பொருள்களின் விலையை கிரஷா் மற்றும் குவாரிகளின் உரிமையாளா்கள் உயா்த்தியுள்ளனா். இம்மாதம் 15-ஆம் தேதி முதல் கிரஷா் மற்றும் குவாரிகளில் எம். சாண்ட் டன் ரூ.1000, ஜல்லி டன் ரூ.900 என உயா்த்தப்பட்டுள்ளது. உடைகல் யூனிட் ரூ.1400, கிராவல் யூனிட் ரூ.800 என உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான மைன்ஸ் உரிமத்துக்கு ரூ.3600-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஒரு டன் எம். சாண்ட் ரூ.600 ஆகவும், ஒரு டன் ஜல்லி ரூ. 500 ஆகவும், ஒரு யூனிட் உடைகல் ரூ.900 ஆகவும், ஒரு யூனிட் கிராவல் ரூ.550 ஆகவும், மைன்ஸ் உரிமம் ரூ.900 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இம்மாதம் திடீரென இதன் விலைகளை இரு மடங்கு வரை உயா்த்தி உள்ளதால் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பங்கள், லாரி உரிமையாளா் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அனைத்து கிரஷா் மற்றும் குவாரிகளில் ஒரே விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும், உயா்த்தப்பட்ட கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.