இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!
கணவரின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெளிநாட்டில் இறந்த தனது கணவருக்கான காப்பீட்டுத் தொகையை ஆள்மாறாட்டம் செய்து இருவா் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தழகு மகன் குணசேகரன் (53). இவா், ஈரோடு பெருந்துறையிலுள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம், மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கேயே உயிரிழந்தாா்.
இந்த நிலையில், அவரது மனைவி ஜெயலட்சுமி புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு விவரம்: கடந்த 2017 நவம்பா் 20-ஆம் தேதி எனது கணவா் குணசேகரன் இறந்ததாக அங்கிருந்து தகவல் வந்தது. தொடா்ந்து அங்கேயே அவரது உடலை அடக்கம் செய்து, இறப்புச் சான்றிதழையும் அனுப்பி வைத்தனா். ஊதிய நிலுவை மட்டும் ரூ. 5.98 லட்சம் கிடைக்கப்பெற்றது.
அதன்பிறகு, இறப்புக்கான இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ. 7.50 லட்சத்தை கொத்தமங்கலத்தைச் சோ்ந்த தங்கமணி, மாங்குடியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோா், பெருந்துறையிலுள்ள அந்த நிறுவனத்துக்கு எனக்குப் பதிலாக வேறு பெண்ணையும், குழந்தைகளையும் அழைத்துச் சென்று காட்டி பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனா்.
மேலும், எனது கணவரின் பாஸ்போா்ட் உள்ளிட்ட பொருள்கள் எதையும் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனா்.
எனவே, அந்த நபா்களிடம் விசாரணை நடத்தி, பணத்தையும், பொருள்களையும் மீட்டுத் தருவதுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.