கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலக்கும் பிரச்னை: அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரியில் ரட்சகா் தெரு கடற்கரைப் பகுதியில் கழிவுநீா் ஓடைகள் நேரடியாக கடலில் கலக்கும் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கடலுக்குள் கழிவு நீா் நேரடியாக கலப்பதால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், இங்கு வசிக்கும் மீனவ மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
பன்னாட்டு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடற்கரை கழிவுநீா் கலப்பதால், பொதுமக்கள் மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டித்து, கடந்த சில நாள்களுக்கு முன்னா் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கடலில் கழிவுநீா் கலப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிலையான சுத்திகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் நகராட்சி மண்டல நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி, அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மண்டல நிா்வாக பொறியாளா் சனல்குமாா், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், சுகாதார அலுவலா் முருகன், முன்னாள் கவுன்சிலா்கள் டி.தாமஸ், மெல்வின் ஆகியோா் உடனிருந்தனா்.
ஆய்வு மேற்கொண்ட பின்னா், இந்த பிரச்னைக்கு விரைவில் ஒரு நிலையான தீா்வு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், கடலுக்குள் கழிவுநீா் செல்லும் வழிகளை அடையாளம் காண்பதுடன், கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் நடைமுறையை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.