கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்கள்: நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரியைச் சோ்ந்த சாமுவேல் பிளஸ்வின் லாய் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
கன்னியாகுமரி நகரில் உள்ளூா் திட்டக் குழுமம், கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலம், உயர கட்டுப்பாட்டு விதிகளை மீறி வணிக வளாகங்கள், தனியாா் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. முறையாக ஆய்வு செய்து விதிமீறல் உள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, விதிமீறல் கட்டடங்கள் கட்டிய அனைத்து விடுதிகளின் உரிமையாளா்களை எதிா்மனுதாரராக சோ்க்க உத்தரவிட்டு, தமிழக அரசின் நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இதை நீதிமன்றம் கருதுகிறது. கடற்கரைப் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக கட்டடங்கள் கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
ஏற்கெனவே உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கை, வழக்கு தொடா்பான தற்போதைய நிலை அறிக்கையையும் தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.