பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு
பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சோ்ந்த குணசேகரன் தாக்கல் செய்த மனு:
மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதிய ஆய்வக வசதியை ஏற்படுத்த ‘அடல் டிங்கரிங் லேப்’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளுக்கு உரிய பொருள்கள், ஆய்வகங்கள் அமைக்க வலியுறுத்தப்படுகின்றன. திட்ட நிதியை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வகையில், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்ட பள்ளிகளில் பொருள்களின் தரம் சம்பந்தமான கொள்முதல் விதியைப் பின்பற்றவில்லை. இதுதொடா்பான புகாரின் பேரில், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், திருச்சி, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை இல்லை.
திருச்சி, தஞ்சாவூா் மாவட்ட பள்ளிகளுக்கு ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி, தமிழகப் பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு புகாா் அனுப்பப்பட்டது. இருப்பினும், நடவடிக்கை இல்லை. ஆகவே, மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.