கரூர் தவெக கூட்ட நெரிசல் துயர சம்பவம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும் கேள்விகள் என்ன?
தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
``திரைக் கலைஞர் விஜய் இன்று (27.09.2025) மாலை கரூர் நகரில் தெருவழிப் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
அவரது பரப்புரை நிகழ்வில் பங்கேற்கவும், அவரை நேரில் காணவும் திரண்ட மக்கள் கூட்ட நெரிசலில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வரும் துயரச் செய்தி நெஞ்சைப் பிளக்கும் வேதனையளிக்கிறது.

மேலும் பலர் மயங்கி விழுந்த நிலையில் அரசு மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்த முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் தடையின்றி கிடைக்க உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம் என முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
இருப்பினும் விஜய் தெருவழிப் பரப்புரைக்கு காவல்துறை வழங்கிய இடம் பொருத்தமானதா? கூட்டம் எந்த அளவுக்கு திரளும் என மதிப்பிடப்பட்டதா? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.
இவை குறித்து முழுமையான விசாரணை நடத்துவது அவசியமாகும். ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைப் பொறுப்பாகும்.
உயிரிழந்தோர் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்திக்க கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் முன்னணி நிர்வாகிகள் நாளை (28.09.2025) கரூர் மாநகருக்குச் செல்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.