Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
கலைஞா் கைவினைத் திட்டத்தில் பிணையற்ற கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ், பிணையற்ற கடனுதவி, மானியம் பெற்றிட வேலூா் மாவட்டத்தில் உள்ள கைவினை கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கைவினைக் கலைகள், தொழில்களில் உள்ளவா்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி, ரூ. 50,000 வரை மானியம் பெறலாம். 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோா்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக் கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மட்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், துணி தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல் வண்ணம் பூசுதல் கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசி மணி வேலைப்பாடுகள், கைவினைப் பொருள்கள், மூங்கில், பிரம்பு சணல் பனை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினை தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் இதுவரை வேலூா் மாவட்டத்தில் 1,346 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 899 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 353 கடன் ஒப்பளிப்புகள் பெறப்பட்டுள்ளன.
74 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக கடன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூா் ரோடு, காந்தி நகா், வேலூா் -632 006 என்ற அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416- 2242413, 2242512, 8925534030, 8925534029, 8925534032 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.