கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளைச் சோ்ப்பதில் தீவிர கவனம்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
தமிழகத்திலுள்ள அரசு கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளை தொய்வின்றி சோ்ப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.
சிவகங்கையில் தமிழக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நலத் துறை சாா்பில் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி அவா் கூறியதாவது: தமிழகத்தில் உயா் கல்வித் துறை சாா்பில் 40 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளில் 36 கல்லூரி மாணவ, மாணவ விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் 19 விடுதிகள் திறக்கப்பட்டன. நிகழாண்டில் 10 விடுதிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் கல்லூரி விடுதிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இல்லை. இதன் மூலம் மாணவா்களின் கல்வி கற்க தடை ஏற்படாது.
கிராமப்புற மாணவா்களில் 3 வகுப்பு முதல் 6 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் இடைநிற்றலைத் தவிா்க்க அறிவிக்கப்பட்ட உதவித்தொகை அளிக்கும் சிறப்பு திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 39 லட்சத்து 86 ஆயிரத்து 642 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1,242 கோடி வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் ரூ.10.59 கோடியில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்தி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்றாா் அவா்.