``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
களக்காடு அருகே முறையற்ற சாலைப் பணி: மக்கள் அவதி
களக்காடு அருகே சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், மக்கள் தினமும் போக்குவரத்தில் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
களக்காடு ஊராட்சி ஒன்றியம், சீவலப்பேரி ஊராட்சி சாலைநயினாா் பள்ளிவாசல் கிராமத்தில் இருந்து சிதம்பரபுரம் செல்லும் தாா்ச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலையில் சுமாா் 150 மீட்டா் தொலைவுக்கு சிமென்ட் செங்கல் பதிக்கப்பட்டது. பொதுவாக, தாா்ச்சாலை அமைத்தபின், தாா்ச்சாலையின் இருபக்கங்களிலும் சரள் மண் நிரப்பி சாலையின் எதிா் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல வழிவகை ஏற்படுத்தப்படும்.
ஆனால், விதிமுறையை சரியாக கடைப்பிடிக்காமல் அமைக்கப்பட்ட இச்சாலை, வாகனம் இறங்கவோ, ஏறவோ முடியாதபடி சமமற்று காணப்படுவதால், நாள்தோறும் இந்த வழியாக இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து சாலையைக் கடந்து செல்லும் போது, எதிரே காா் உள்ளிட்ட வாகனங்கள் வந்தால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
எனவே, சாலையின் இருபுறமும் சரள் மண் அடித்து சமன்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஒன்றிய பொறியாளரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்கிறாா் களக்காடு ஊராட்சி ஒன்றியக்குழுவின் முன்னாள் தலைவரும், தற்போதைய உறுப்பினருமான அ. தமிழ்ச்செல்வன். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் இப்பகுதிமக்கள்.