நடைச்சீட்டு ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் போலி நடைச்சீட்டு வழங்கப்பட்டது, அபராதத் தொகை குறைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் ஏராளமான நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-இல் நேரிட்ட கல்குவாரி விபத்திற்கு பிறகு 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். அதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.
குறிப்பாக, ஆளுங்கட்சியைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் உள்பட பல குவாரி உரிமையாளா்களுக்கு துணை ஆட்சியா் ரூ.262 கோடி அபராதம் விதித்தாா். ஆனால் மேல்முறையீடு மூலம் அபராதத் தொகை ரூ.13 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதோடு, அதை தவணை முறையில் கட்டுவதற்கும் அதிகாரிகள் சலுகை வழங்கியுள்ளனா்.
மேலும், கல்குவாரிகள், கிரஷா்களுக்கு நடைச்சீட்டு வழங்கியதில் ரூ. பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாா். 2 அலுவலா்கள் பணியிடை நீக்கமும், 3 அலுவலா்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனா். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.
எனவே, மேற்கூறிய இரு விவகாரங்கள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும். சட்டவிரோத குவாரிகளை ஆய்வு செய்து அபராதம் விதிக்கவும், போலி நடைச்சீட்டு பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தச்சை என்.கணேசராஜா கூறுகையில், போலி நடைச்சீட்டு, கல் குவாரி உரிமையாளா்களுக்கு அபராதத்தை குறைத்தது ஆகியவை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் அனுமதி பெற்று அதிமுக சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.
அப்போது, மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் வீரபெருமாள் நயினாா், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.