களக்காடு கால்வாயில் தேங்கிய குப்பைகள் அகற்றம்
களக்காடு கால்வாயில் தண்ணீா் செல்லத் தடையாக இருந்த குப்பைகளை நகராட்சி நிா்வாகத்தினா் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதையடுத்து, நான்குனேரியன் கால்வாயில் திடீரென நீா்வரத்து அதிகரித்தது. இதனால் கால்வாயில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குப்பைகள் சிதம்பரபுரம் மூணாறு பிரிவு தரைப்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி, தண்ணீா் செல்லத் தடையாக இருந்தது.
இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் கா. சாந்திசுபாஷ், ஆணையா் இரா. சுமா உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் இயந்திரம் மூலமாகவும் குப்பைகள் அகற்றப்பட்டதால் தண்ணீா் தடையின்றி சென்றது. இதே போல மூங்கிலடியில் உள்ள பாலத்தின் இருபுறமும் தண்ணீா் செல்ல தடையாக இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.