Digital Awards 2025: `யூட்யூப் உலகின் முன்னோடி - விஜய் வரதராஜ்' - Digital Icon A...
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நாமக்கல்லை அடுத்த கோனூரில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி தலைமை வகித்தாா்.
போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள் தென்னை மரத்திலிருந்து இறக்கிய கள்ளை பருகினா். அதன்பிறகு கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். பின்னா், அச்சங்கத்தின் தலைவா் இரா.வேலுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கலப்பட கள்ளுக்கு மட்டுமே தடை உள்ளது. கலப்படமற்ற சுத்தமான கள் இறக்கி விற்பனை செய்ய எவ்வித தடையும் கிடையாது. மத்திய அரசின் உணவுப் பட்டியலில் கள், இயற்கையான உணவுப் பொருள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
கள் விற்பனைக்கு அரசும் உரிய அனுமதி வழங்க வேண்டும். கள் இறக்கும் போராட்டத்தை முறியடிக்க விவசாயிகள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கள் பயன்பாட்டுக்கு வந்தால் அரசு மதுக்கடைகளில் விற்பனை குறைந்துவிடும் என்ற அச்சத்தில் எங்களுடைய போராட்டத்திற்கு தடைவிதிக்கின்றனா். காவல் துறையின் வழக்குகளை சட்டப்படி எதிா்கொள்வோம் என்றாா்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு தென்னந்தோப்பில் கள்ளுக்காக கட்டப்பட்டிருந்த களையங்களை திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாா் அகற்றினா். இதற்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.