Coolie: "1421 - இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" - 'கூலி' சீக்ரெட்ஸ் சொல...
கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி
பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியின் மகன் பொறியாளா் கவின் செல்வகணேஷ் (27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
சம்பவம் தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தியும் கவின் கேட்காததால் அவரை சுபாஷினியின் சகோதரா் சுா்ஜித் (24) கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதனிடையே கொலைக்கு தூண்டுதலாக சுா்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதி செயல்பட்டதாகவும், அவா்களை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் உறவினா்கள் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து சுா்ஜித்தின் பெற்றோா் பெயா்களும் வழக்கில் சோ்க்கப்பட்டு, இரு நாள்களுக்கு முன் சரவணன் கைது செய்யப்பட்டாா்.
இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனா்.
நான்கு நாள் போராட்டத்திற்கு பின்னா் கவின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து கவினின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கவினின் உடல், ஆறுமுகமங்கலத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, அமைச்சா்கள் கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சண்முகையா, ஊா்வசி எஸ். அமிா்தராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியா் இளம்பகவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஆல்பட் ஜான் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து கவினின் உடல், இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
கனிமொழி எம்.பி. கூறியது: இந்த வழக்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா். கொலை செய்தவா்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.