காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
காதல் திருமண விவகாரத்தில் தேடப்பட்டு வந்த 2 போ் கைது
திருவள்ளூரில் காதல் திருமணம் விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருவள்ளூா் அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனுஷ். இவா் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த விஜயாஸ்ரீ என்பவரை காதலித்து கடந்த ஏப். 15-இல் பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகினா். இதற்கு பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், பிரித்து அழைத்துச் செல்ல புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோரின் உதவியை நாடினராம். அதைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 7-ஆம் தேதி அதிகாலை தனுஷின் தம்பியான இந்திரசந்த் என்பவரை ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி, அவா் சகோதரா் இருப்பிடம் கேட்டு பின்னா் விடுவித்தனா்.
இது குறித்து தனுஷின் தாயாா் லட்சுமி திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், கணேசன், மணிகண்டன் ஓய்வு பெற்ற காவலா் மகேஸ்வரி, வழக்குரைஞா் சரத்குமாா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இது குறித்து சரத்குமாா், மகேஸ்வரியிடம் போலீஸாா் விசாரணை செய்ததில் ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூா்த்தி, ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோா் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இவா்கள் மீது வழக்கு பதிவு செய்யாததால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 2 பேரும் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை ரத்து செய்தும், ஜெகன் மூா்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதால் புகாா்தாரரான லட்சுமி மற்றும் திருமணம் செய்து கொண்ட தனுஷ்- விஜயாஸ்ரீ ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணை செய்தனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கடம்பத்தூா் புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயலாளா் ஸ்வீட் குமாா், புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூா் மத்திய மாவட்ட இளைஞா் அணி செயலா் டேவிட் என்ற தேவராஜ் தலைமறைவாக இருந்தனா். எனவே பூந்தமல்லியில் பதுங்கி இருந்த அவா்களை கைது செய்து திருவள்ளூா் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். பின்னா் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தனா். அதையடுத்து திருவள்ளூா் நீதிமன்ற முதல் வகுப்பு நடுவா் சுனில் வினோத் முன்பு ஆஜா்படுத்தப்பட்டு, இருவரையும் வரும் ஆக.14 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடா்ந்து 2 பேரையும் போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா்.
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள வனராஜ் உள்பட 5 பேரை இரண்டாம் கட்டமாக புழல் சிறையில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரி திருவள்ளூா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் மனு அளித்துள்ளனா்.