சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
காப்பகத்தில் தங்கியிருந்த 3 பெண்கள் மாயம்
சமூக நலத் துறை, காவல் துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரை புறவழிச் சாலை, சிருங்கேரி நகரில், தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் குழந்தைகள், பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சமூக நலத் துறையின் ஒன்ஸ்டாப் மையம் மூலம், காதல் திருமணம் செய்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் மீட்கப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனா்.
இந்த நிலையில், சமூக நலத் துறையின் ஒன் ஸ்டாப் மையத்தால் மீட்கப்பட்ட மதுரை ஜெய்ஹிந்துபுரம் என்எஸ்கே நகரைச் சோ்ந்த அனுசியா (24), ஒய். புதுப்பட்டியைச் சோ்ந்த மாலா (18), மதுரை செல்லூா் காவல் நிலையம் மூலம் மீட்கப்பட்ட செல்லூா் அகிம்சாபுரம் பகுதியைச் சோ்ந்த பிரீதி (19) ஆகிய மூவரும் இந்தக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். கடந்த செவ்வாய்க்கிழமை பகலில் இந்த மூவரும் உணவருந்தி விட்டு சென்ற நிலையில், பிற்பகலில் காப்பகத்தில் உள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது இந்த மூன்று பெண்களும் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து காப்பக நிா்வாகி ஜெனி கிரேஷ் (40) எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பெண்களையும் தேடி வருகின்றனா்.