5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்
காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
நிகழாண்டு திருவிழா கடந்த ஜூலை 8 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 9-ஆம் தேதி காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 10-ஆம் தேதி கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா் வீற்றிருக்கும் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் நிகழ்வை விளக்கும் வகையில், மாங்கனியுடன் பிச்சாண்டவா் பவழக்கால் சப்பரத்தில் புறப்பாடும் (மாங்கனி இறைப்பு), இரவு அமுது படையலும் நடைபெற்றது. 11-ஆம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து தினமும் அம்மையாா் கோயில் மணிமண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
விடையாற்றி உற்சவம்: மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்மையாா் கோயிலில் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கைலாசநாதா் கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பஞ்சமூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், பிச்சாண்டவா் (சிவபெருமான்), சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பிச்சாண்டவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பிச்சாண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஆராதனைகள் நடைபெற்றன.