நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு
காவல் நிலைய மரணங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் காவல் நிலைய உயிரிழப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் காவல் நிலைய உயிரிழப்புகள் தொடா் நிகழ்வாக உள்ளன. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை, காவல் நிலையத்தில் நிகழ்ந்த கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும். இதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்ததுடன் கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதிவிடக் கூடாது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை விசாரணை முடிவடையவில்லை. நீதி கிடைக்கவில்லை. இந்த நிலை, அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணையில் ஏற்படக் கூடாது. சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து, வரும் 3 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து நீதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்தும் மக்களை சித்ரவதை செய்யும் கூடங்களாக உள்ளன. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஒருவரைக் கைது செய்யும் போது, காவல் துறையினா் கடைப்பிடிக்க வேண்டிய 11 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. ஆனால், இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. இனிவரும் நாள்களில் இந்த நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் நிலையங்கள் ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஆளும் கட்சி கிளைச் செயலரின் அறிவுறுத்தலை மீறி, காவல் ஆய்வாளா்கூட செயல்பட முடியாது என்ற நிலை இருப்பது ஆரோக்கியமானதல்ல. காவல் துறை பணிகளில் ஆளும் கட்சியினரின் தலையீடுகள் முற்றிலுமாகத் தவிா்க்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டம்....
இதையடுத்து, மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை உள்பட காவல் நிலைய உயிரிழப்புகளுக்கு நீதி கோரி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மருத்துவா் க. கிருஷ்ணசாமி பங்கேற்றுப் பேசினாா்.
கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலா் மருத்துவா் ஷ்யாம் கிருஷ்ணசாமி, மதுரை மாநகா் மாவட்டச் செயலா் து. தாமோதரன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
