காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை
காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் கூறியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காஸா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, ``ஒரு விவேகமான நாடு, எப்போதும் பொதுமக்களுக்கு எதிராக போரிடாது. பொழுதுபோக்குக்காக குழந்தைகளையும் கொல்லாது. பெருமளவிலான மக்களை இடம்பெயரச் செய்யாது.
இவ்வாறான, ஒரு நாட்டை ஆளும் திறனற்ற மற்றும் பழிவாங்கல் குணமானது, நமது வாழ்வாதாரத்தையே ஆபத்தில் ஆழ்த்தி விடும்’’ என்று இஸ்ரேல் அரசை விமர்சித்தது.
இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் தெரிவித்ததாவது, ``காஸாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எதிரிகள்தான். காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது.
நாங்கள் காஸாவை ஆக்கிரமித்து, அங்கு குடியேற வேண்டும். இதனைத் தவிர, வெற்றி என்று வேறெதுவும் இல்லை’’ என்று கூறினார்.
மோஷேவின் இந்தக் கருத்தானது, பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலை நிறுத்துமாறு, உலக நாடுகள் பலவும் கோரிக்கை விடுத்தாலும், அதனை இஸ்ரேல் கண்டுகொள்வதாய் இல்லை.
இதனிடையே, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா நாடுகள் தெரிவித்தன. இதனையடுத்து, அந்நாடுகள் மனிதாபிமானத்தின் தவறான பக்கத்தில் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.